மரங்களின் சிறப்பு

முன்னுரை :-

                   ஓரு மரத்தை நடுவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பம் 20 வருடங்களுக்கு முன்பாகும்.இரண்டாவது சந்தர்ப்பம் இன்றாகும்  சீனப் பழமொழி வாழ்நாளில் எப்போதாவது நாம் ஒரு மரத்தை நட்டிருக்கிறோமா? இல்லையெனில் இன்றே ஒரு மரத்தை நட முயற்சிப்போம்.மரம் நடுபவர்கள் உலகில் குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மரங்களைத் தரிக்க நிறையப் பேர் இருக்கின்றனர்.நீங்கள் ஒரு மரத்தைத் தொடும்போது பெரும்பாலும் ஒரு மனிதரைத் தொடுவதாகவே நினையுங்கள்.உங்களால் பார்க்கவியலாத ஒரு மனிதனின் உழைப்பு  ஒவ்வொரு மரத்திற்குப் பின்னும் இருக்கிறது.ஒரு மரத்தை நடுவதென்பது வெறுமனே ஒரு செயல் மாத்திரமல்ல.அது ஒரு வாழ்க்கை முறை.மானுடத்தின் மீது மனிதன் கொள்ளும் மிகப் பெரிய கரிசனையின் வெளிப்பாடு அது.

மரங்களின் சிறப்பு :-

                        மரங்களால் சுற்றுச்சூழல்வளமாகும் மனித வாழ்வு நலமாகும். மரம் வளர்க்க மழை; மழை பொழிய வறுமை ஒழியும்.ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ; நாளை
மண்ணை மகிழ்வாய் ஆள. மரம் மனிதனின் மூன்றாவது கரம். இரு கைகளைக் கடந்து இயற்கையைக் காக்கும் மூன்றாவது கரமாக   உள்ளது மரம். சுற்றுச் சூழலைச் சுகமாய் காப்பதில் மரங்கள் முதன்மையான காரணியாக விளங்குகின்றன. மரங்கள் பூக்கும் போதெல்லாம் மனித மனங்களும் பூக்கின்றன. ஆதி மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போது இன்பமாக வாழ்ந்தான். மனிதன் நிர்வாணமாக இருந்த போது, மரம்தான் தன் இலைதழைகளை மரப்பட்டைகளை ஆடையாகக் கொடுத்து மானம் காத்தது. நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இன்று மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை நிர்வாணமாகி வருகிறது. மரங்கள் அதிகளவு இருக்கும் வரை சுற்றுச்சூழல்சுகமாக இருக்கும். மரங்கள் அழியத் தொடங்கும் போது மனித சமுதாயத்தின் அழிவும் தொடங்கிவிடும்.

      மண்ணின் மைந்தர்கள்

                 மரங்கள் மண்ணின் மைந்தர்கள். மரங்கள் நம் தேசத்தின் தியாகிகள். தியாகிகள் இல்லையென்றால் நம் வாழ்வில் திருப்பங்கள் ஏது? மரங்கள் இல்லையென்றால் நம் வாழ்வில்
மகிழ்ச்சி ஏது? நம் உடலும் உள்ளமும் உறுதி பெற நமக்காக தவம் செய்யும்முனிவர்கள் இந்த மரங்கள். நம்மை மகிழ்விக்கும் அந்த மரங்களின் சந்ததி நம்மோடு கடைசி வரை பயணித்தால்,
நமது வாழ்க்கைப் பயணம் வளமாக நலமாக இருக்கும். நாம் பெருக்கச்சொன்னதைச் சுருக்கினோம்; அது மரம். சுருக்கச் சொன்னதைப் பெருக்கினோம்; அது மக்கள் தொகை. பெருகி
வரும் மக்கள் தொகைக்கேற்ப மரங்களும்பெருகினால்தான் மனித குலம் தழைக்கும், பிழைக்கும் நிலைக்கும்.

          மரங்களும் கடவுள்களும்:

                   ஆதிகால மனிதன் இயற்கையை கடவுளாக வணங்கினான். மரவழிபாடு அன்று இருந்தது. கடவுள் மரங்களில் உறைந்துள்ளார் என்ற நம்பிக்கை இன்றும் நம் மக்களிடம் உள்ளது. சங்க இலக்கியமும், பக்தி இலக்கியமும் இதைப் பதிவு செய்துள்ளன. நோயால் மக்கள் இறந்த போது தங்களையும், தங்கள் சந்ததியையும் காப்பாற்றிய தாவரங்களை மக்கள் தெய்வமாக வழிபட்டனர். பின்னாளில் தெய்வ உறைவிடமாக இருந்த மரம் அழிக்கப்பட்டு, கட்டடங்கள் எழுப்பப்பட்டு கோவில்கள் உருவாக்கப்பட்டன. மனிதர்களால் மரங்கள் தெய்வ நிலையை இழந்தன.இயற்கை சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்பினான்.அதுவே மரவழிபாடாக மலர்ந்தது. நாட்டுப்புறத் தெய்வங்களான சிறு தெய்வங்கள் ஏதேனும் ஒரு
மரத்தினடியில் அமைந்திருப்பதையும், மரத்தோடு இணைந்து அவை வழிபடப்படுவதையும் நாம் காணலாம். கடவுளோடு கைகோர்த்துநிற்கின்ற மரங்கள் மனிதனின் பார்வையில் இருந்து தப்பி வாழ்ந்துவருகின்றன.

               மரங்களும் மன்னர்களும்:

                   சங்ககால மன்னர்கள் மரங்களை தங்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்தனர். வேப்பமரமும் அதன் பூக்களும் பாண்டிய மன்னர்களின் சின்னம். அத்திப்பூ சோழ மன்னர்களின் சின்னம். போந்தை; என்கிற பனைமரம் சேரமன்னர்களின் சின்னம். அரசமரம் தொண்டை மண்டல மன்னர்களின் சின்னம்.தமிழக பேரரசர்கள் மற்றும் சிற்றரசர்களின் கோட்டைகளில் காவல் மரங்கள் என்ற பெயரில் பல மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. காவல் மரம் கடிமரம் என அழைக்கப்பட்டது. கடிமரத்தை மாற்றான் வீழ்த்தினால் மன்னன் வீழ்ந்தான் என்பது பொருள்.அசோகர், மரங்களை நேசித்த மாமன்னர் எனச்சொல்லலாம். சாலையோரம் மரங்களை நட்டு வைத்து பயணத்தை குளுமையாக்கியவர் இவரே! இன்றும் நமது கிராம, நகரச் சாலைகளில் இருபுறமும் மரங்கள் இருப்பதற்குக் காரணம் அசோகர்.

             மரங்களும் மனிதர்களும்:

                     ஒரு காகம் தன் வாழ்நாளில் எச்சங்கள் மூலமாக பல்லாயிரம் மரங்களை நடுவதாக ஆய்வு சொல்கிறது. மனிதர்களாகிய நாம் எத்தனை மரங்களை நட்டு வைத்துப்
பராமரிக்கிறோம்? எனக் கேள்வி கேட்டால் அதற்கான பதில் என்னவாக இருக்கும் என் நாம் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற முழக்கம் முன்பு.
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற முழக்கம் இன்று வழக்கமாகி வருகிறது. நம் வீட்டைச் சுற்றி பத்து வகையான மரங்கள் இருக்க வேண்டும் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.வீட்டிற்கு முன் ஒரு வேப்ப மரம். பக்கத்தில் ஒரு முருங்கை
மரம், பப்பாளி மரம். குளிக்கும் தண்ணீர் போகுமிடத்தில் வாழை மரம். பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம், ஒரு எலுமிச்சை மரம். அதன் நிழலில் ஒரு கறிவேப்பிலைச் செடியும்,
நெல்லிச் செடியும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம். இடம் இருந்தால் பலா மரம், ஒர் மாமரம். இப்படி இருந்தால் பசியுடன் ஒருவர்கூடத் துாங்க மாட்டார்கள் என நம்மாழ்வார்
கூறுகிறார். பத்து மரங்கள் நட இயலாவிட்டாலும், இடமில்லாவிட்டாலும் ஒத்த மரமாவது நடலாம். போதி
மரம்தான் நடவேண்டும் என்றில்லை; நமக்குப் போதிய மரங்கள் நட்டு வைத்தால் கூட போதும். மரங்களின் மகத்துவத்தை, வளரும் சமுதாயமாக உள்ள மாணவர்களின் மனதில் விதைக்க
வேண்டும். பிறந்தநாளின் போது மரம் நட ஊக்குவிக்க வேண்டும்.
இனிப்புகள் வழங்கி கொண்டாடும் மாணவர்களிடம், ஒரு மரமோ, பூச்செடியோ நட்டு வைத்து அந்த மாணவனையே பள்ளியில் பராமரிக்கச் செய்து வரலாம். மரம் வளர மாணவன் வளர்வான்;
மாணவன் வளர மரம் வளரும். பத்தாண்டுகள் கழித்து, தான் பயின்ற பள்ளிக்கு வரும்போது மரமும் வளர்ந்திருக்கும். அந்த மாணவனும் கல்வியால் வாழ்வில் வளர்ந்திருப்பான்.

மரங்களின் பயன்கள் :-

                  உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம் மரம் நமக்கு என்ன தருகிறது? மலர்கள், காய், கனிகள் தருகிறது நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது காற்றை சுத்தப்படுத்துகிறதுநாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன்டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத்
தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது. மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன. ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த
மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது. ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறதுரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது. ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது. ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று
மாசுபாட்டைத் தடுக்கிறது. ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன்டைஆக்சைடின் அளவு 1000 கிலோ. மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது. ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை . மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்: மரங்கள்
உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும்
திறனைப் பெற்றுள்ளன. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும். மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும்,
வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன. மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள்
அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன. மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும்.
இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து
ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில்
மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

                     புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்திகாடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம்
கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. உயிரோடு
இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது. மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு
கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

முடிவுரை:-
                 
                நம் பிள்ளைகளுக்குசொத்துக்களை விட்டுச் செல்வதை விட மரங்களை விட்டுச்செல்வோம். ஒரு மரம் வெட்டப்பட்டுக் கீழே விழும் போது, மனித இனத்தின் மகிழ்ச்சிச்சங்கிலி அறுபடத் தொடங்குகிறது.

                  உறவுகளை அறிமுகம் செய்வதைப்போல நமது பிள்ளைகளுக்கு மரங்களை அறிமுகம் செய்து வைப்போம். வனங்களுக்கு அழைத்துச் சென்று மாணவரது மனங்களைப் பசுமை ஆக்குவோம். மண் கொடுத்த சீதனமான மரங்களை சேதாரமின்றிக் காப்போம். மரம் போல் வாழ்வோம்!

Comments

Post a Comment

Popular posts from this blog

காடுகளை பாதுகாப்பது எப்படி ? – How to conserve forest?

பொங்கல் - Pongal tamil composition